கீழை தென்றல் இணைய தளத்திற்கு வருகை தரும் அனைவருக்கும் நன்றி !

Friday, July 20, 2012

அமெரிக்காவில் இசை நிகழ்ச்சி நடத்தத் தயாராகும் இசைஞானி!

Ilayaraaja Perform Live Concert Us முதல் முறையாக அமெரிக்காவில் இசைக் கச்சேரி நடத்தப் போகிறார் இசைஞானி இளையராஜா.
கலிபோர்னிய நகரங்கள் மற்றும் நியூயார்க்கில் இந்த இசை நிகழ்ச்சிகள் நடக்கவிருப்பதாக முதல்கட்ட தகவல்கள் தெரிவிக்கின்றன.

இளையராஜா வெளிநாடுகளில் இரண்டு நிகழ்ச்சிகள்தான் நடத்தியிருக்கிறார். ஒன்று இத்தாலியில், மற்றொன்று துபாயில்.
ஆனால் உலகின் பல நாடுகளிலிருந்தும் இசை ஆர்வலர்கள் அவரை கச்சே செய்து தரச் சொல்லி கேட்டு வருகிறார்கள். அவரோ அரிதாகவே அத்தகைய நிகழ்ச்சிகளை ஒப்புக் கொள்கிறார்.
இந்த நிலையில், அமெரிக்காவில் முதல் முறையாக இசை நிகழ்ச்சி நடத்த ஒப்புக் கொண்டுள்ளார் ராஜா.
இந்த கச்சேரியில் ராஜாவின் மகன்கள் கார்த்திக் ராஜா, யுவன் சங்கர் ராஜா, மகள் பவதாரிணி ஆகியோரும் கலந்து கொள்கிறார்கள். முன்னணி பாடகர்கள், பாடகிகளுடன் இளையராஜாவின் குழு அமெரிக்கா புறப்படுகிறது, நவம்பர் இறுதியில்!

டிசம்பர் முதல் வாரத்தில் இந்த நிகழ்ச்சிகள் நடக்கும் எனத் தெரிகிறது.

Thursday, July 19, 2012

ஜெயலலிதா மீண்டும் கொடநாடு சென்றார்

சென்னை, ஜூலை.19-
 
முதல்-அமைச்சர் ஜெயலலிதா நேற்று மாலை கொடநாட்டில் இருந்து சென்னை வந்தார். அ.தி.மு.க., எம்.பி., எம்.எல்.ஏ.க்.கள் கூட்டத்தில் பங்கேற்றார். இன்று காலை 8.30 மணிக்கு புதிய அமைச்சர் பதவி ஏற்பு விழாவில் கலந்து கொண்டார்.
 
9 மணிக்கு கோட்டையில் சென்னை போலீசாருக்கு ரோந்து வாகனங்களை வழங்கினார். 10 மணிக்கு ஜனாதிபதி தேர்தலுக்கான தனது வாக்கை பதிவு செய்தார்.
 
பகல் 11.45 மணிக்கு போயஸ் கார்டன் திரும்பினார். மதியம் 12.30 மணிக்கு முதல்-அமைச்சர் ஜெயலலிதா சென்னை விமான நிலையம் புறப்பட்டார். அங்கிருந்து விமானத்தில் கோவை சென்று கொடநாடு போனார்.

நீலகிரி மாவட்டத்தில் பன்றிக்காய்ச்சலுக்கு பெண் பலி: மேலும் 4 பேருக்கு சிகிச்சை

நீலகிரி, ஜூலை 19-

உதகமண்டலம் அருகே உள்ள போர்தியாடா கிராமத்தைச் சேர்ந்த ஒரு 30 வயதான பெண், கடும் இருமல் மற்றும் தொண்டை வலியால் பாதிக்கப்பட்டு அங்குள்ள ஆரம்ப சுகாதார நிலையத்தில் கடந்த இரண்டு நாட்களாக சிகிச்சை பெற்று வந்தார்.

இந்நிலையில் நேற்று இரவு அவரது குழந்தைகளுக்கும் அந்நோய் பரவியது. இது பன்றிக் காய்ச்சலுக்கான அறிகுறிகளாக தென்பட்டதையடுத்து அந்த பெண்ணும், அவரது 3 குழந்தைகளும் உடனடியாக கோவை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர்.

அங்கு அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் சிறப்பு வார்டில் அனுமதிக்கப்பட்டு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. அவர்களுக்கு பன்றிக் காய்ச்சல் பரிசோதனைகள் நடைபெற்று வருகின்றன.

ஏற்கனவே அவரது குடும்பத்தைச் சேர்ந்த ஒரு பெண் பன்றிக் காய்ச்சலுக்கு பலியானார். எனவே அவரிடமிருந்து பன்றிக் காய்ச்சல் நோய் தொற்றியிருக்கலாம் என அஞ்சப்படுகிறது.

இதுபற்றி தகவல் அறிந்த மாவட்ட வருவாய் அதிகாரி நிர்மல்ராஜ், பன்றிக்காய்ச்சல் அறிகுறியுடன் வந்த பெண்ணின் ஊரான போர்த்தியாடா கிராமத்துக்கு விரைந்து சென்று அங்குள்ள நிலைமை பற்றி ஆய்வு மேற்கொண்டார்.

மேலும் நோய் பரவாமல் தடுக்க டாக்டர்கள் குழுவினர் தீவிர பரிசோதனை மேற்கொண்டு மருந்து மாத்திரைகள் வழங்கி வருகின்றனர்

பழம்பெரும் நடிகர் காகா ராதாகிருஷ்ணன் மாரடைப்பால் காலமானார்

சென்னை,ஜூன்.14- நடிகர் திலகம் சிவாஜி கணேசனை திரையுலகிற்கு அறிமுகம் செய்து வைத்த பெருமைக்குரியவர் நடிகர் காகா ராதாகிருஷ்ணன். பழம்பெரும் நடிகரான அவர் சென்னையில் இன்று மாரடைப்பால் காலமானார். உடல் நலமில்லாததால் கடந்த 10 நாட்களாக மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த ராதாகிருஷ்ணன், சிகிச்சை முடிந்து வீடு திரும்பினார். இந்நிலையில் திடீரென ஏற்பட்ட மாரடைப்பால், அவர் இன்று காலமானார். சென்னை தி.நகரில் உள்ள அவரது வீட்டில் உயிர் பிரிந்தது. காகா ராதாகிருஷ்ணன் என்றழைக்கப்படும் ராதாகிருஷ்ணன், மங்கையர்க்கரசி என்ற படத்தின் மூலம் அறிமுகமானார். இதுவரை 600-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார் ராதாகிருஷ்ணன். சிவாஜியுடன் நடித்த மனோகரா, கமலுடன் நடித்த குணா, தேவர்மகன், வசூல்ராஜா எம்.பி.பி.எஸ், அஜீத்துடன் நடித்த உன்னைத்தேடி, விஜய்யுடன் நடித்த காதலுக்கு மரியாதை ஆகியவை அவர் நடித்த படங்களில் குறிப்பிடத்தகுந்தவை

மலேசியா - சிங்கப்பூருக்கு சுற்றுலா அழைத்து செல்வதாக 200 பேரிடம் ரூ.1கோடி மோசடி

சென்னை, ஜூலை. 19-

அண்ணாநகர் “ஐ” பிளாக் 10-வது தெருவில் ரன்வே ஏர்லைன்ஸ் டிராவல்ஸ் என்ற தனியார் நிறுவனம் உள்ளது. இதனை அண்ணாதுரை, செந்தில் ஆகியோர் நடத்தி வந்தனர். இவர்கள் வெளிநாடுகளுக்கு பயணிகளை சுற்றுலா அழைத்து செல்லும் பணியில் ஈடு பட்டு வந்தனர். இவர்கள் புதிதாக சுற்றுலா பற்றிய அறிவிப்பை வெளியிட்டனர்.

உலக சித்தர்கள் மாநாடு மலேசியாவில் நடக்கிறது. சுற்றுலா பயணிகள் இந்த மாநாட்டை கண்டுகளித்து அங்கிருந்து சிங்கப்பூர், தாய்லாந்து ஆகிய நாடுகளுக்கு சுற்றுலா அழைத்து செல்லப்படு வார்கள் என்ற அறிவிப்பை வெளியிட்டனர். இதற்காக ஒரு நபருக்கு கட்டணம் ரூ.45 ஆயிரம் என்று நிர்ணயிக்கப்பட்டது. இதில் விசா, விமான டிக்கெட் உள்பட அனைத்து செலவுகளும் அடங்கும் என்று கூறினார்கள்.

இந்த சுற்றுலாவில் செல்ல சென்னை, திருப்பூர், கோபியை சேர்ந்த 260 பேர் முன்பதிவு செய்து பணம் கட்டினார்கள். அவர்கள் அனைவருக்கும் நேற்று நள்ளிரவு 12 மணிக்கு விமானம் மூலம் புறப்பட வேண்டும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டது. எனவே மாலையில் அவர்களை தி.நகர் பாண்டிபஜார் தபால் நிலையம் எதிரில் உள்ள ஒரு ஓட்டல் அருகில் வருமாறு கூறினார்கள்.

இதையடுத்து 260 பேரும் லக்கேஜ் மற்றும் பொருட்களுடன் தி.நகர் வந்தனர். ஓட்டல் அருகில் அவர்கள் கூடிநின்றனர். அப்போது டிராவல்ஸ் உரிமையாளர் அண்ணா துரை அங்கு வந்தார். அவர் 50 பேருக்கு மட்டும் விசா கொடுத்தார். மற்றவர்களுக்கு சிறிது நேரத்தில் விசா வாங்கி வருவதாக கூறிவிட்டு சென்றார். அதன் பிறகு அவர் அங்கு திரும்பி வரவில்லை. இதனால் அங்கு நின்று கொண்டிருந்த 210 சுற்றுலா பயணிகளும் ஏமாற்றம் அடைந்தனர்.

இதற்கிடையே விசா கிடைத்தவர்கள் விமானம் நிலையம் சென்று மலேசியா புறப்பட்டு சென்றனர். மேலும் 20 பேர் தங்கள் சொந்த பணத்தில் மலேசியா புறப்பட்டனர். மற்றவர்கள் தி.நகரில் தவித்துக்கொண்டிருந்தனர். பின்னர் அவர்கள் பாண்டி பஜார் போலீஸ் நிலையத்துக்கு புகார் கொடுக்க சென்றனர். அவர்களை இன்று காலையில் வந்து புகார் கொடுக்கு மாறு போலீசார் கூறினார்கள்.

இதையடுத்து சுற்றுலா பயணிகள் அங்கிருந்து சென்று விட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.1 கோடி வரை மோசடி செய்யப்பட்டுள்ளது. இந்த நிலையில் இன்று பகல் 12.30 மணியளவில் பணம் கொடுத்து ஏமாந்த 50 பேர் மாம்பலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். அவர்களில் சில பெண்களும் உள்ளனர். அவர்கள் தாங்கள் கொண்டுவந்த சூட்கேஸ் மற்றும் பொருட்களுடன் போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்தனர்.
நன்றி மாலை மலர்.

நகராட்சி மண்டல இயக்குநர் நடவடிக்கை!கீழக்கரை கடற்கரை சுத்த‌மாகிற‌து !




நகராட்சி மண்டல நிர்வாக இயக்குனர் குபேந்திரன் கீழக்கரைக்கு திடீர் வருகை தந்து பல் வேறு இடங்களுக்கு சென்று ஆய்வு மேற்கொண்டார் மேலும் கடற்கரை சென்ற அவர் கடற்கரையில் குவிந்து கிடக்கும் கோழி கழிவுகள் உள்ளிட்ட குப்பைகளை உடனடியாக அகற்ற உத்தரவிட்டார்.

இதை தொடர்ந்து மண் அள்ளும் எந்திரம்(ஜெசிபி), லாரி வரவ‌ழைக்கப்பட்டு குப்பைகள் அகற்றும் பணி தொடர்ந்து நடைபெற்று வருகிறது.

மேலும் புதிதாக கட்டப்படும் உரக்கிடங்கு, தற்போது குப்பை கொட்டப்படும் தனியார் தோப்பு, புதிதாக அமைக்கப்பட்ட சாலைகளை பார்வையிட்டார். கமிஷனர் முஜிபுர் ரஹ்மான், தலைவர் ராவியத்துல் கதரியா உள்ளிட்டோர் உடன் சென்றனர்.



இதே போன்று தொடர்ந்து நடவடிக்கைகள் மேற்கொண்டு நகரை சுத்தமாக்க அரசு உதவ‌ வேண்டும் என்று பொதுமக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.நன்றி கீழக்கரை டைம்ஸ்.

கொடிகட்டிப் பறக்கும் சதை வியாபாரம்: எலும்பும், தோலும் கோடிக்கணக்கான ரூபாய்க்கு விற்பனை!

இறந்த பின்னர் மனித உடலுக்கு மதிப்பில்லை எல்லாம் ஒரு பிடி சாம்பலில் முடிந்து விடும் என்று சித்தர்களும், ஞானிகளும் சொல்லி வந்தனர். இப்பொழுது அந்த வார்த்தையை அப்படியே மறந்து விட வேண்டியதுதான். மனித உடல் பல கோடி ரூபாய் பெறுமானமுடையதாக இருக்கிறது.
இறந்த பின்னர் மனிதனின், தோலும், எலும்புகளும் களவாடப்படுகின்றனவாம். எலும்புகளையும், தோலினையும் வைத்து உறுப்பு மாற்று சிகிச்சை செய்யவும், பற்களுக்கும் பயன்படுத்துகின்றனராம். அதற்கு அந்த நோயாளியின் அனுமதியை பெறுவதில்லை என்று அதிர்ச்சிகரமான தகவல் ஒன்றினை கண்டறிந்து வெளியிட்டுள்ளனர் ஐசிஐஜெ எனப்படும் (International Consortium of Investigative Journalists) சர்வதேச புலனாய்வு பத்திரிக்கையாளர்கள். இந்த கண்டுபிடிப்பு உலகம் முழுவதும் அபாய மணியை ஒலிக்கவிட்டிருக்கிறது
உலகம் முழுவதும் மனித உடல் உறுப்புக்களை திருடி கள்ளச்சந்தையில் விற்று பணம் பார்க்கும் கும்பல் அதிகரித்து வருகிறது. எட்டு மாதங்களாக 11 நாடுகளுக்கு பயணம் செய்த புலனாய்வு பத்திரிக்கையாளர்கள் மனித உறுப்புக்களை திருடும் கும்பலைப்பற்றியும், அதை கள்ளச்சந்தையில் விற்பனை செய்பவர்களைப் பற்றியும் எழுதியுள்ளனர்.
உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைக்காக இதுபோன்ற இறந்த மனிதர்களின் தசை, எலும்புகளை புதிதாக பயன்படுத்துவதன் மூலம் ஆபத்து அதிகம் இருப்பதாக கூறும் ஆய்வாளர்கள், ஹெச் ஐ வி மற்றும் உயிர்கொல்லி நோயினால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் தோலும், எலும்பும் திருடப்பட்டு உயிரோடு இருப்பவர்களுக்கு பயன்படுத்தும் போது அதுவே ஆபத்தாகிவிடும் என்கின்றனர்.
இறந்துபோன மனித உடலில் இருந்து தசைகளையும், தோலினையும் எடுப்பது அவர்களின் உறவினர்களிடையே கூட ஏற்றுக்கொள்ள முடியாத ஒன்றாகிவிடுகிறது. இதுபோன்ற மனித உறுப்புகளை திருடி விற்பனை செய்யும் கும்பல் பற்றி ஸ்கார்ட் கார்னி என்னும் எழுத்தாளர் ‘ரெட் மார்க்கெட்' என்னும் நூலில் ஆய்வு செய்து எழுதியுள்ளார்.
உலகம் முழுவதும் மனித உறுப்புகளின் களவு, விற்பனை, மோசடி, குறிப்பாக மூன்றாம் உலக நாடுகளில் வாழும் ஏழை மக்களை ஏமாற்றி அவர்களுடைய உடல் பாகங்களைத் திருடும் இதயம் இல்லா பன்னாட்டு நிறுவன வியாபாரிகளைப் பற்றி விரிவாகப் பேசுகின்றது தி ரெட் மார்க்கெட். (The Red Market).
உலக அளவில் இன்று உறுப்பு மாற்று அறுவை சிகிச்சைகள் வெற்றிகரமாக நடக்குமளவு மருத்துவத் துறை முன்னேறி இருக்கின்றது. ஆனால் உடல் உறுப்பு மாற்று அறுவைச் சிகிச்சை செய்ய மாற்று உறுப்புகள் வேண்டுமே? அது தான் இன்றைய விற்பனைப் பொருள். சந்தையில் பல பில்லியன்கள் இலாபம் தரும் நல்ல சரக்கு.
ஒவ்வொரு நாட்டின் காகிதச் சட்டமும் இந்த உடல் உறுப்பு தானத்தை மிக உன்னதமாகக் கருதி, பாதுகாப்பாகவும், சட்டப்பூர்வமாகவும் தானம் செய்ய மக்களை அனுமதிக்கின்றது. ஆனால் ஸ்கார்ட் கார்னி இந்தப் புத்தகத்தினூடே பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து, அந்தந்த நாடுகளில் உடல் உறுப்பு சம்பந்தமான திருட்டு, விற்பனை, அதில் கொள்ளை இலாபம் பார்க்கும் ஏஜெண்டுகள், கண்டுகொள்ளாமல் விடும் அரசுகள் என சகலத்தையும் போட்டு உடைக்கிறார்.
உலகம் முழுவதும் பல பணக்கார நாடுகளின் உடற் தேவைகளை அதாவது ரத்தம் முதல் எலும்பு, தசை, கிட்னி, கண், பெண்ணின் கரு முட்டை, தலைமுடி வரை தேவைப்படும் அனைத்தையும் ஈடு செய்வது மூன்றாம் உலக நாடுகளின் மக்கள் தான், குறிப்பாக இந்தியா. அதோடு இலவசச் சேவையாக பல பன்னாட்டு மருந்து கம்பெனிகளுக்கு சோதனை எலிகளாகவும் இருக்கிறார்கள் இந்திய மக்கள்.
‘தேவைப்படுபவர் வாங்குகிறார், இருப்பவர் விற்கிறார்' என்ற சராசரி சந்தைப் பொருளாக நம் உடல் உறுப்புக்களைப் பார்க்க முடியாது. உயிருக்குக் கொடுக்கப்படும் அதே மதிப்பு உடல் உறுப்புகளுக்கும் கொடுக்கப்படுகின்றது. பணத்தின் முன் ஒரு ஏழையின் உடல் என்பது ரத்தமும் தசையுமான விற்பனைப் பண்டம்.
அமெரிக்கப் பல்கலைக் கழகங்களில் மருத்துவம் பயிலத் தேவைப்படும் மனித எலும்பு மாதிரிகள் முழுக்கவும் இந்தியாவில் இருந்து அனுப்பப்படுகின்றனவாம். சுடுகாடுகளில், புதைக்கப்படும், எரிக்கப்படும் பிணங்களை திருடி பிணத்திலிருந்து பதப்படுத்தி எலும்புகளை மட்டும் எடுப்பார்கள். அந்த பதப்படுத்தும் முறை கொடூரமாக இருக்கும். பின்பு எலும்புகளை சுத்தமாக பாலிஷ் செய்து பேக்கிங் செய்து விடுவார்கள்.
அமெரிக்காவிலும், ஐரோப்பாவிலும் கடுமையான சட்டங்கள் வந்து விட்டன. அமெரிக்காவில் தான் இந்தச் சட்டம் கடுமையானது, அதே அமெரிக்க அரசு இந்தியா போன்ற மூன்றாம் உலக நாடுகளில் இருந்து வரும் மனித உறுப்புகளைக் கண்டுகொள்வதில்லை. இந்த எலும்புத் தொழிற்சாலைகள் நேர்த்தியான கார்ப்பரேட்டுகளாக இயங்குகின்றன.
"மூன்றாம் உலக நாடுகளின் உயிர்கள் எப்பொழுதும் மலிவானவை. இதுதான் காலனியச் சிந்தனை". அதை நிரூபிக்கும் அனைத்து ஆதாரங்களையும் தன் புத்தகத்தில் அனைவருக்கும் எளிதாகப் புரியும் வண்ணம் விளக்கியுள்ளார். இதற்காக நாடு நாடாக, பல ஊர்கள் சுற்றி உடல் உறுப்புகள் பற்றிய சந்தையைப் பற்றி தகவல்கள் திரட்டி நெற்றிப்பொட்டில் அடிப்பது போல் முன்வைக்கிறார் ஆசிரியர் ஸ்கார்ட் கார்னி
உடல் விற்பனை என்பது, குழந்தைகள் கடத்தல், பெண்கள் விற்பனை, பெண்களின் கரு முட்டை விற்பனை, இரத்தம், கிட்னி, இதயம் உள்ளிட்ட இதர உடல் உறுப்புக்கள், இறந்தவர்களின் தோல், எலும்பு, வாடகைத் தாய் முதல் திருப்பதியில் இருந்து ஏற்றுமதி ஆகும் தலை முடி வரை அந்த புத்தகத்தில் எழுதப்பட்டுள்ளது.
ஒவ்வொருவரும் கோடி ரூபாய் பெறுமானமுள்ளவர்கள்தான். இனிமேல் யாரையாவது திட்டும்போது பைசா பெறாதவனே என்று திட்டாதீர்கள் புரிகிறதா?

Monday, July 16, 2012

விமானிகளின் போராட்டத்தை நிறுத்துங்கள்: ஏர் இந்தியா நிர்வாகத்துக்கு கோர்ட் அறிவுரை

புதுடெல்லி, ஜூலை 16-

ஏர் இந்தியா விமானிகளின் வேலை நிறுத்தம் தொடர்பான வழக்கு டெல்லி ஐகோட்டில் நடைபெற்று வருகிறது. இம்மாத துவக்கத்தில் விமானிகளின் கோரிக்கையை ஏற்பதாகவும், பணி நீக்கம் செய்யப்பட்ட 100 விமானிகளை மீண்டும் பணியில் சேர்ப்பதாகவும் ஏர்இந்தியா உறுதி அளித்தது.

இதையடுத்து தங்கள் போராட்டத்தை விமானிகள் வாபஸ் பெறுவதாக அறிவித்தனர். ஆனால் நீக்கப்பட்ட விமானிகள் பணியில் சேர்க்கப்படவில்லை.

இந்நிலையில் இன்று இவ்வழக்கு விசாரணைக்கு வந்தது. அப்போது, பணி நீக்கம் செய்யப்பட்ட விமானிகளை மீண்டும் பணியில் அமர்த்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், போராடும் விமானிகளை சமாதானம் செய்து போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரவேண்டும் என்றும் நீதிபதி வலியுறுத்தினார்.

பீகாரில் 4 மாத ஆண் குழந்தையை நேபாள தம்பதிக்கு ரூ.62க்கு விற்ற தாய்

பாட்னா: பீகார் மாநிலத்தில் வறுமையின் கொடுமையை தாங்க முடியாமல் பெண் ஒருவர் தனது 4 மாத ஆண் குழந்தையை வெறும் ரூ.62க்கு விற்றுள்ளார்.
பீகார் மாநிலம், அராரியா மாவட்டத்தைச் சேர்ந்தவர் ஷன்னு காத்தூன்(35). வறுமையில் வாடும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு தனது கிராமத்தில் இருந்து புறப்பட்டு இந்திய-நேபாள் எல்லையில் உள்ள போர்ப்ஸ்கஞ்சிற்கு சென்றார். அங்குள்ள ரயில் நிலையத்தில் குழந்தைகளுடன் தங்கினார். பின்னர் தனது 4 மாத ஆண் குழந்தையை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு ரூ.62க்கு விற்றுள்ளார்.
இது குறித்து தகவல் அறிந்த போலீசார் ஷன்னுவைப் பிடித்து விசாரித்தபோது தான் குழந்தையை விற்கவில்லை என்றும், வறுமையில் வாடும் தன்னால் அதை சரியாகப் பார்த்துக் கொள்ள முடியாது என்பதால் ஒரு தம்பதிக்கு கொடுத்ததாகவும் தெரிவித்துள்ளார்.
ஆனால் அவருடயை மகள் சபினாவோ(8) தனது தம்பி பாப்பாவை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு தனது அம்மா ரூ.62க்கு விற்றதாக அக்கம்பக்கத்தினரிடம் கூறியுள்ளாள்.
இது குறித்து ரயில்வே பாதுகாப்பு படையைச் சேர்ந்த செய்யது அஹ்சான் அலி கூறுகையில், ஷன்னு தனது குழந்தையை நேபாளத்தைச் சேர்ந்த தம்பதிக்கு கொடுத்துவிட்டார். அவர் அந்த தம்பதியிடம் இருந்து பணம் எதுவும் வாங்கவில்லை என்று என்னிடம் தெரிவித்தார் என்றார். இந்த விவகாரம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தும் அதை உதறிவிட்டு பொறியியல் படிப்புகளில் சேர்ந்த 29 மாணவர்கள்

சென்னை: எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்தும் அதை உதறிவிட்டு 29 மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
எம்.பி.பி.எஸ். கலந்தாய்வில் கலந்து கொண்டு சீட் கிடைத்த 29 மாணவர்கள் தங்கள் சேர்க்கைக்கான கடித்தத்தை திருப்பிக் கொடுத்துவிட்டு பி.இ. கலந்தாய்வில் கலந்து கொண்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
இது குறித்து தமிழ்நாடு பொறியியல் கல்லூரி சேர்க்கை செயலாளர் ரைமண்ட் உத்திரியராஜ் கூறுகையில்,
எம்.பி.பி.எஸ். சீட் கிடைத்த 29 மாணவர்கள் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் எலக்ட்ரானிக் அன்ட் கம்யூனிகேஷன், மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ், ஐ.டி. பிரிவுகளைத் தேர்வு செய்துள்ளனர்.
நேற்று மட்டும் 13 மாணவர்கள் தங்களின் எம்.பி.பி.எஸ். சேர்க்கைக்கான கடிதங்களை ஒப்படைத்துவிட்டு பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர். அவர்கள் கொடுத்த சேர்க்கைக் கடிதங்கள் மருத்துவ சேர்க்கை குழுவுக்கு அனுப்பிவைக்கப்படும் என்றார்.

வழக்கம் போல் இந்த ஆண்டும் எம்.பி.பி.எஸ். படிப்பில் சேர கட் ஆஃப் மதிப்பெண் போட்டி ஏற்பட்டது. இதில் 198.5க்கு குறைவாக கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற முற்பட்ட வகுப்பு மாணவர்கள், 197.5க்கு கீழ் கட் ஆஃப் மதிப்பெண் பெற்ற பிற்பட்ட வகுப்பு மாணவர்களுக்கு அரசு கல்லூரிகளில் இடம் கிடைக்காமல் சுயநிதி கல்லூரிகளில் அரசு இடஒதுக்கீட்டின் கீழ் உள்ள இடங்கள் தான் கிடைத்தன.
சுயநிதி மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து படிக்க கல்விக் கட்டணம் ரூ.2.80 லட்சம் உள்பட ஆண்டுக்கு ரூ. 5.5 லட்சம் செலவாகும். அவ்வளவு பணம் கட்ட முடியாமல் தான் அந்த 29 மாணவர்களும் பி.இ., பி.டெக். படிப்புகளில் சேர்ந்துள்ளனர்.
பி.இ., பி.டெக். பொதுப்பிரிவினருக்கான கலந்தாய்வில் கடந்த 3 நாடகளில் 1,721 பேர் கலந்து கொள்ளவில்லை. மேலும் கலந்தாய்வுக்கு வந்திருந்தவர்களில் 46 பேர் எந்த பாடப்பிரிவையும் தேர்வு செய்யவில்லை. இதனால் 195 மற்றும் அதை விடக் குறைவாக கட் ஆஃப் மதிப்பெண் வாங்கியுள்ளவர்களுக்கு சிறந்த க்லலூரிகளில் இடம் கிடைக்கும் வாய்ப்பு உள்ளது.
அதே சமயம் அண்ணா பல்கலைக்கழகத்தில் இ.சி.இ., மெக்கானிக்கல், கம்ப்யூட்டர் சயன்ஸ் உள்ளிட்ட முக்கிய பாடப்பிரிவுகளுக்கான இடங்கள் நிரம்பிவிட்டன என்பது குறிப்பிடத்தக்கது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா வருகிறது பாக். கிரிக்கெட். அணி - டிசம்பரில் "பரபரப்பான" போட்டிகள்

டெல்லி: ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு பாகிஸ்தான் கிரிக்கெட் அணி இந்தியாவுக்கு வருகை தர உள்ளது. டிசம்பரில் இந்தியா- பாகிஸ்தான் இடையே போட்டிகள் நடைபெற உள்ளன.
இத்தகவலை இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் உறுதி செய்திருக்கிறது. இந்திய அணியுடன் 3 ஒரு நாள் போட்டிகளில் பாகிஸ்தான் மோத உள்ளது.
2008-ம் ஆண்டு மும்பை தாக்குதலுக்குப் பிறகு இந்தியா- பாகிஸ்தான் இடையேயான உறவுகளில் பாதிப்பு ஏற்பட்டது. 2011-ம் ஆண்டு உலகக் கோப்பை போட்டியில் இரண்டு அணிகளும் மோதின.
இந்நிலையில் பாகிஸ்தான் கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியத்தின் தீவிர முயற்சியால் மீண்டும் இருநாடுகளிடையேயான "பரபரப்பான" கிரிக்கெட் உறவு துளிர்விட்டுக் கொண்டிருக்கிறது.

Wednesday, July 11, 2012

ராமநாதபுரம் அருகே இளம்பெண் கடத்தல்: வாலிபர் மீது தந்தை புகார்

ராமநாதபுரம், ஜூலை 10-

ராமநாதபுரத்தை அடுத்துள்ள அத்தியூத்து கிராமத்தைச் சேர்ந்தவர் தட்சிணாமூர்த்தி, கூலி தொழிலாளி. இவரது மகள் நந்தினி (வயது22). இவர் பள்ளி படிப்பை முடித்து விட்டு வீட்டில் தனது பெற்றோருக்கு உதவியாக இருந்து வந்தார்.

நேற்று வீட்டில் இருந்த நந்தினி திடீரென்று மாயமானார். இதனால் பதட்டம் அடைந்த அவரது தந்தை மற்றும் உறவினர்கள் பல இடங்களில் நந்தினியை தேடி பார்த்தனர். ஆனால் அவர் எங்கும் கிடைக்கவில்லை.

இதுகுறித்து தட்சிணா மூர்த்தி, தேவிபட்டினம் போலீசில் புகார் செய்தார். புகார் மனுவில், எனது மகளை பனைக்குளம் கிராமத்தைச் சேர்ந்த அப்துல் ரகுமான் என்பவரின் மகன் ஆதம் அலி கடத்தி சென்று விட்டார். எனவே அவரிடம் இருந்து எனது மகள் நந்தினியை மீட்டுதர வேண்டும் என்று கூறி இருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாயமான நந்தினியை தேடி வருகிறார்கள்.

போரில் 60 ஆயிரம் பேரை கொன்று குவித்த காங்கோ ராணுவ தளபதிக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை: சர்வதேச கோர்ட்டு தீர்ப்பு

ஆப்பிரிக்க நாடான காங்கோவில் உள்ள இட்டூரி மாகாணத்தில் கடந்த 1999 முதல் 2003-ம் ஆண்டு வரை உள்நாட்டு போர் நடந்தது. அதில் ஈடுபட்ட பொதுமக்களை அடக்கி ஒடுக்க ராணுவம் பயன்படுத்தப்பட்டது. அதில், ஈடுபட்ட ராணுவத்துக்கு தாமஸ் லுயின்கா டிலோ தளபதி ஆக இருந்தார்.
 
இவர் இட்டூரி மாகாணத்தில் முகாமிட்டு அப்பகுதியில் 15 வயதுக்குட்பட்ட சிறுவர், சிறுமிகளை கடத்தி வந்து கட்டாயப்படுத்தி ராணுவத்தில் சேர்த்தார்.   அவர்கள் மூலமே இட்டூரி பகுதி மக்கள் மீது தாக்குதல் நடத்தினார். அதில் 60 ஆயிரம் பேர் கொன்று குவிக்கப்பட்டனர்.
 
இச்சம்பவத்துக்கு உலக நாடுகளும் ஐ.நா.சபையும் கடும் கண்டனம் தெரிவித்தன. மேலும் இந்த கொடூர சம்பவத்தில் ஈடுபட்ட லூயின்காவை ஐ.நா. கைது செய்து சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தது. அதில் அவர் குற்றவாளி என கடநத மார்ச் மாதம் தீர்ப்பளிக்கப்பட்டது.
 
இந்த நிலையில் நேற்று அவருக்கு 14 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நீதிபதி எலிசபெத் ஒடியோ பெனியோ உத்தரவிட்டார். இதுவே சர்வதேச குற்றவியல் கோர்ட்டில் வழங்கப்பட்ட முதல் தண்டனையாகும்.
 
இந்த தண்டனையை மனித உரிமை அமைப்புகள் வரவேற்றுள்ளன. ஆனால் அவரது தண்டனையை எதிர்த்து அப்பீல் செய்யப் போவதாக காங்கோ ராணுவம் அறிவித்துள்ளது

எதிர்கட்சியினரை கைது செய்வதிலேயே போலீசார் குறியாய் உள்ளனர்: கருணாநிதி குற்றச்சாட்டு

சென்னை: எதிர்கட்சியினர் மீது துரித நடவடிக்கை எடுக்கும் காவல்துறை ஆளுங்கட்சியினர் மீதான வழக்குகளை மட்டும் இழுத்தடித்து வருவதாக திமுக தலைவர் கருணாநிதி குற்றம் சாட்டியுள்ளார்.
இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது,
அதிமுக சட்டப்பேரவை உறுப்பினர் பரஞ்சோதி மீதான வழக்கில் ஜூலை 9ம் தேதி கண்டிப்பாக குற்றப்பத்திரிக்கையை தாக்கல் செய்வதாக காவல்துறையினர் நீதிமன்றத்தில் உறுதி அளித்தனர். ஆனால் வழக்கு விசாரணைக்கு வந்தபோது வழக்கை விசாரிக்கும் உதவி ஆணையர் விடுமுறையில் சென்றுவிட்டதாகவும், பரஞ்சோதியின் கையெழுத்துப் பரிசோதனை அறிக்கை கிடைக்கவில்லை என்றும் அரசு வழக்கறிஞர் விளக்கம் அளித்துள்ளார்.
இதில் இருந்தே அதிமுகவினர் என்றால் காவல்துறையினர் எந்த அளவிற்கு நீதிமன்றத்தையும், நீதியையும், சட்ட விதிமுறைகளையும் இழுத்தடித்து வருகிறார்கள் என்பதைப் புரிந்து கொள்ளலாம் என்று அவர் அதில் தெரிவித்துள்ளார்.

அமெரிக்காவில் நித்தியானந்தாவுக்கு தண்டனை கிடைத்தால் தூக்கிட வேண்டியதுதான்... மதுரை ஆதீனம்

மதுரை: அமெரிக்க கோர்ட்டின் தீர்ப்பை எதிர்பார்த்து காத்திருக்கிறேன். அந்தக் கோர்ட்டில் நித்தியானந்தாவுக்கு தண்டனை விதிக்கப்பட்டால் அவர் இளைய ஆதீனமாக தொடர முடியாது. நீக்கப்படுவார் என்று கூறியுள்ளார் மதுரை ஆதீனம்.
இதுதொடர்பாக வார இதழ் ஒன்றுக்கு மதுரை ஆதீனம் பேட்டி அளித்துள்ளார். அதிலிருந்து சில துளிகள்...
நான் நித்தியானந்தாவின் பிடியில் சிக்கி இருப்பதாக சொல்லப்படுவது கற்பனை. என்னை யாராலும் கட்டுப்படுத்த முடியாது. அதை நான் அனுமதிக்கவும் மாட்டேன். என்னை அவர் வசியம் செய்யவில்லை. வசிய மைகள் என்னை நெருங்காது. வசியம் செய்யவும் முடியாது. எனக்கு அப்படி ஒரு சக்தி இருக்கிறது.
சங்கட்டமா இருக்குல்ல...
நித்தியானந்தாவோடு நான் பத்திரிகையாளர்களை சந்திக்கும்போதெல்லாம் அவர்கள் எல்லோரும் அவர் மீது உள்ள பாலியல் குற்றச்சாட்டுகள் பற்றியே கேட்கிறார்கள். அப்போது எனக்கு சங்கடமாக இருக்கும். அதனால்தான் அவரோடு உங்களை சந்திக்கும் போது உற்சாகமாக நான் இருக்க முடியவில்லை.
இளைய ஆதீனத்தை தேர்வு செய்வது குறித்து என்னைத் தவிர யாரும் முடிவு எடுக்க முடியாது. வேறு யாரும் தலையிடவும் கூடாது. நித்தியானந்தா நியமனத்தில் ஆதீன மரபுகள் ஒரு போதும் மீறப்படவில்லை. அவருக்கு முறைப்படி தீட்சை கொடுத்து தான் இளைய ஆதீனமாக நியமித்தேன். மற்ற ஆதீனங்கள் இந்த பிரச்சினை குறித்து தங்களிடம் ஆலோசிக்க வரும்படி என்னை அழைத்தனர். நான் நித்தியானந்தாவுடன் தான் வருவேன் என்று சொன்னதால் அவர்கள் ஒத்துக் கொள்ளவில்லை.
பல ஆதீனங்களுக்கு பிரச்சினைகள் வந்த போது அவர்களுக்கு நான் ஆலோசனைகள் வழங்கி இருக்கிறேன். நானும் பல ஆதீனங்களின் ஆலோசனைகளை கேட்டிருக்கிறேன். நித்தியானந்தா பிரச்சினையால் அவர்களுக்கு மன வருத்தம் ஏற்பட்டுள்ளது.
ஆதீனத்தில் புலித்தோல் இருக்கிறது, மான் தோல் இருக்கிறது, யானைத்தந்தம் இருக்கிறது என்று கோர்ட்டில் வழக்கு போட்டார்கள். கோர்ட்டு உத்தரவால் ஆசிரமத்துக்குள் போலீஸ் நுழைந்தது. ஆனால் சோதனையில் எதையும் எடுக்கவில்லை. மரகத லிங்கம் இருந்தாக சொல்வதும் கற்பனை.
நித்தியானந்தா கொடைக்கானலில் இருக்கிறார். அவர் திரும்பி வந்தாலும் இதே உற்சாகத்துடன்தான் இருப்பேன். அவர் மீது உள்ள பாலின புகார் வழக்குகளை அவரே சந்தித்துக் கொள்வார். இதில் ஆதீனம் தலையிடாது.
அமெரிக்காவில் உள்ள கலிபோர்னியா நீதிமன்றத்தில் அவர் மீது போடப்பட்ட மோசடி வழக்கில் ஜூலை 19-ந்தேதி தீர்ப்பு வரும் என்று நீங்கள் கூறுகிறீர்கள். தீர்ப்பு அவருக்கு எதிராக வந்தால், அவரை நீக்குவது பற்றி முடிவு செய்து அறிவிப்பேன். ஏன் என்றால் தண்டனைக்கு ஆளாகிறவர்கள் இளைய ஆதீனம் பதவியில் தொடர முடியாது. ஆகவே, எந்த முடிவுக்கும் நான் தயங்க மாட்டேன் என்று சொல்லியுள்ளார் மதுரை ஆதீனம்.
கலிபோர்னியா கோர்ட்டில், நித்தியானந்தாவின் தியான பீடங்கள் மிகவும் மோசமான முறையில் பண மோசடியில் ஈடுபட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. விரைவில் இந்த வழக்கில் தண்டனை வழங்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.

பெண்கள், சிறுமிகளை கடத்துவதில் தமிழ்நாடு 'நம்பர் ஒன்'!

கோவை: பெண்கள் மற்றும் சிறுமிகள் கடத்தலில் தென்னகத்திலேயே தமிழ்நாடுதான் முதல் இடத்தில் உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் தெரிவித்துள்ளது.
2011ம் ஆண்டு பெண்கள் அதிக அளவில் கடத்தப்பட்டது தமிழகத்தில்தானாம். நான்கு தென் மாநிலங்களிலேயே தமிழகத்தில்தான் அதிக அளவில் பெண்கள் கடத்தல் நடந்துள்ளதாம்.
தமிழகத்தில் சிறுமிகள் உள்பட பெண்கள் கடத்தல் சம்பவங்கள் 1743 நடந்துள்ளது. ஆந்திராவில் இது 1612 ஆகவும், கர்நாடகத்தில் 1395 ஆகவும், கேரளாவில் 299 ஆகவும் இருந்தது.
தேசிய அளவில் உ.பிக்குதான் கடத்தலில் முதலிடம் கிடைத்துள்ளது. அங்கு மொத்தம் 7525 வழக்குகள் இதுதொடர்பாக பதிவாகியுள்ளன. இரண்டாவது இடத்தில் மேற்கு வங்கமும், 3வது இடத்தில் பீகாரும் உள்ளன.
தமிழகத்தில் அதிகபட்சமாக விழுப்புரம் மாவட்டத்தில் 187 கடத்தல் சம்பவங்கள் நடந்துள்ளன. சேலத்தில் 108, கடலூரில் 100 சம்பவங்கள் நிகழ்ந்துள்ளன. தலைநகர் சென்னையில் 41 வழக்குகள் பதிவாகியுள்ளன. கோவையில் இது 39ஆக இருந்தது.
தமிழகத்தைப் பொறுத்தவரை பெண்கள், சிறுமிகள் கடத்தல் தவிர மற்ற கடத்தல் சம்பவங்களின் எண்ணிக்கை 241 ஆக இருந்தது. இதையும் சேர்த்தால் மொத்தம் 1984 கடத்தல் சம்பவங்கள் கடந்த ஆண்டு தமிழகத்தில் நடந்துள்ளன.
குடும்பப் பிரச்சினை, கல்யாணம் செய்து தர மறுப்பது, பணம் கேட்டு மிரட்ட என்று பல்வேறு காரணங்களுக்காக கடத்தல் சம்பவங்கள் பொதுவாக நடக்கின்றன. கள்ளக்காதலில் நடைபெறும் கடத்தல்களும் கணிசமாக உள்ளதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் கூறுகிறது.nanrithatsthamil

Saturday, July 7, 2012

வரும் 9ல் கம்ப்யூட்டரை தாக்க வரும் வைரஸ் ;டி.என்.எஸ்.,சேஞ்சர் மூலம் அபாயம் வருமா

வாஷிங்டன்: ஏய் வைரஸ் வரப்போகுதாமே என்ன செய்யப்போகிறாய் என்ற பேச்சுத்தான் தற்போது எங்குப்பார்த்தாலும் தகவல் பரிமாறக்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த வைரஸ் இணையத்தை முடக்கி உங்களின் கணினியை செயல் இழக்கச்செய்து விடும். இது புதிதாக தாக்குதலை தரப்போவதில்லை என்ற நிம்மதியான தகவல் வல்லுநர்கள் தெரிவித்தாலும் ஏற்கனவே உங்கள் கம்ப்யூட்டரில் இந்த வைரஸ் இருந்தால் வரும் 9 ம்தேதி அம்பேல்தான் என்கின்றனர். கம்ப்யூட்டர் இன்ஜினியர்கள்.

டி.என்.எஸ்.,( டொமைன் நேம் சிஸ்டம் ) என்பது நாம் வைத்துள்ள தளத்தின் முகவரியை கணினிக்கு புரியும் வகையில் ஐ.பி.எண்ணாக மாற்றி அந்த தளங்கள் திறக்க உதவுகிறது. தற்போது டி.என்.எஸ்.,சேஞ்சர் ( அலூரியன் மால்வேர் ) என்ற வைரஸ் உருவாக்கி இதன் மூலம் உங்கள் சிஸ்டத்தை செயல் இழக்கச்செய்யும் நாச வேலையில் அயல்நாட்டவர்கள் 7 பேர் இறங்கினர் . இது கடந்த நவம்பரில் பரப்பி விடப்பட்டது. இதன் மூலம் பல கம்ப்யூட்டர்கள் பாதிக்கப்பட்டன. மேலும் பாதிப்பில் இருந்து தப்பிக்க இதனை அமெரிக்க உளவு பிரிவு எப்.பி.ஐ., மாற்று சர்வரை நிறுவி உதவியது. இந்த சர்வரை நிறுத்திட முடிவு செய்திருப்பதால் இந்த வைரஸ் மீண்டும் வரும் 9 ம் தேதி செயல்பட துவங்கி விடுமாம். இதனால் உலகம் முழுவதும் பல லட்ச கம்யூட்டர்கள் செயல் இழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறியுங்கள் : எனவே டி.என்.எஸ்., சேஞ்சர் என்ற வைரஸ் பாதிக்கப்பட்டிருக்கிறதா என்று அறிந்து முன்சோதனை செய்து கொள்ளவும். பெரும் கார்ப்ரேட் நிறுவனங்கள் ஆண்டி வைரஸ் வைத்திருப்பதால் பாதிப்பில் இருந்து தப்பிக்க முடியும். நடுத்தரமானவர்கள் இது போன்று ஆண்டிவைரஸ் வைக்காத பட்சத்தில் பாதிப்பு வர வாய்ப்புகள் அதிகம். எனவே தங்களின் கம்ப்யூட்டர்களில் இது போன்று வைரஸ் பாதிப்பு உள்ளதா என கண்டறிய நீங்கள் http://www.dns-ok.us/ கிளிக் செய்தால் பாதிக்கப்டாமல் இருந்தால் பச்சைக்கலரில் வரும். பாதிக்கப்பட்டிருக்குமானால் சிவப்பு நிற இமேஜ் வரும். வரும் 9 ம்தேதி என்ன நடக்குமோ என்ற அச்சத்தில் உள்ளனர் இன்டர்நெட் உபயோகிப்பாளர்கள்.



வைரசை முற்றிலுமாக அழிக்க : ஒருவேளை உங்கள் கணினி பாதிக்க பட்டிருந்தால் முதலில் இந்த படிவத்தை forms.fbi.gov/dnsmalware பூர்த்தி செய்யவும். உங்கள் கணினியில் இருந்து அந்த
வைரசை நீக்குவது எப்படி என இங்‌கே விளக்கம் தரப்பட்டுள்ளது. விண்டோஸ் XP, Vista, 7 கணினிகளுக்கு: DNS Changer வைரசை கணினியில் இருந்து நீக்குவதற்காக பிரபல ஆன்ட்டிவைரஸ் நிறுவனமான அவிரா ஒரு புதிய மென்பொருளை உருவாக்கி உள்ளனர். இந்த லிங்கில் Avira DNS Repair சென்று மென்பொருளை டவுன்லோட் செய்து கொள்ளுங்கள்.

டவுன்லோட் ஆகியதும் exe பைலை இரண்டு கிளிக் செய்து இன்ஸ்டால் செய்ய தொடங்கியவுடன் கீழே இருப்பதை போல வந்தால் உங்கள் கணினி பாதுக்காப்பாக உள்ளது. ஆகவே இந்த மென்பொருள் உங்கள் கணினியில் இன்ஸ்டால் ஆகாது.ஒருவேளை பாதிக்கப்பட்டிருந்தால் இந்த மென்பொருள் அந்த வைரசை கண்டறிந்து உங்கள் கணினியில் இருந்து அழித்து விடும்.

மேக்(Mac) கணினிகளுக்கு: மேக் கணினிகளில் இருந்து இந்த வைரசை நீக்க இந்த மென்பொருளை DNS Changer Removal Tool டவுன்லோட் செய்து நீக்கி கொள்ளலாம்.

இனி 'குடிகார நாடு என்கிற தமிழ்நாடு' என்பதே பொருத்தமாக இருக்கும் - டாக்டர் ராமதாஸ்

சென்னை: தமிழகத்தை இனி குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்று குறிப்பிடுவதே பொருத்தமாக இருக்கும், என்றார் டாக்டர் ராமதாஸ்.
மதுக்கடைகளுக்கு பூட்டுப் போடும் போராட்டம் பா.ம.க. சார்பில் வரும் 11-ம் தேதி நடக்கிறது. இப்போராட்டத்தை விளக்கி கூடுவாஞ்சேரி கூட்ரோடு பகுதியில் பா.ம.க. பொதுக்கூட்டம் நடந்தது. முன்னாள் எம்.எல்.ஏ. திருக்கச்சூர் ஆறுமுகம் தலைமை தாங்கினார்.
கூட்டத்தில் பா.ம.க. நிறுவனர் டாக்டர் ராமதாஸ் பேசியதாவது:
இளைஞர்களை கெடுக்கும், இளம் விதவைகளை உருவாக்கும், விபத்துக்களை ஏற்படுத்தும், உழைக்கும் மக்களை சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும் குடி மக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு வருகிற 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் நடைபெற உள்ளது.
நாங்கள் மக்களை பற்றி கவலைபடுகிறோம். சாராயம் குடிக்க கூடாது என்று மக்கள் மத்தியில் சொல்கிறோம். இளைஞர்களிடத்தில் சொல்கிறோம். சாராய கடைகளை மூடு என்று சொல்கிறோம். அதற்காக போராட்டம் நடத்துகிறோம்.
சமூக பிரச்சினைகளுக்கான கூட்டம், வாழ்கின்ற சமூகத்தில் மக்கள் பாதிக்கப்படுகிறார்கள். இளைஞர் பாதிக்கப்படுகிறார்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பெண்கள் பாதிக்கப்படுகிறார்கள் என்ற கவலை கரிசனம் நமக்கு மட்டும்தான் உண்டு. வேறு யாருக்கும் இருக்காது. கடந்த ஆண்டு டாஸ்மாக் மூலம் ரூ. 18 ஆயிரம் கோடி, அடுத்த வருடத்திற்கு ஒரு இலக்கு வைத்துள்ளனர். 2013 ல் ரூ. 21 ஆயிரம் கோடிக்கு மேல் கிடைக்கும்.
தெரு தெருவாக சாராய கடைகளை திறந்து குடி மக்களாக ஆக்கி விட்டார்கள். தமிழகத்தையே சீரழித்து விட்டார்கள். தமிழ்நாட்டை குடிகார நாடு என்கிற தமிழ்நாடு என்றால்தான் இனி பொருத்தமாக இருக்கும்.
தமிழகத்தில் மது வெள்ளமாக ஓடுகிறது. அரசியல்வாதிகள் பணத்தில் மிதக்கிறார்கள். இந்த பிரச்சினையை தமிழ் நாட்டில் பா.ம.க. மட்டும்தான் எடுத்துச் சொல்கிறது. பா.ம.க. 1989 ல் உதயமானது. 2 மாதம் கழித்து அக்டோபர் 2 ந் தேதி காந்தி பிறந்த நாளன்று பெண்களை கொண்டு தமிழ்நாடு முழுவதும் மது ஒழிப்பு போராட்டம் நடத்தினோம். நமது கட்சிக்கு சமூகத்தை பற்றிய கவலை இருக்கிறது.
பா.ம.க. சமூக இயக்கம். இளைஞர்களுக்கு வழி காட்டுவதைத் தொடர்ந்து 22 வருடமாக செய்து கொண்டிருக்கிறது.
இன்றைக்கு 13 வயது சிறுவன் கூட குடிக்கின்றான். சாராய கடைகளை இவர்கள் மூட மாட்டார்கள். நாம்தான் மூட வேண்டும். இளைஞர்களை கெடுக்கும், உழைக்கும் மக்களைச் சுரண்டும், தமிழ் மக்களை சீரழிக்கும், குடிமக்களை குடிகார மக்களாக்கும் அரசு மதுபான கடைகளுக்கு 11 ந்தேதி பூட்டு போடும் போராட்டம் அறவழியில் நடைபெற உள்ளது.
இவ்வாறு டாக்டர் ராமதாஸ் பேசினார்.

ரகசிய ஒப்பந்தங்களை ரத்து செய்துவிட்டு சிங்களப் படையினரை இந்தியாவிலிருந்து வெளியேற்ற வேண்டும்: வைகோ

 Scrap Secrete Deal With Sl Militay
சென்னை: இலங்கை ராணுவத்துடனான அனைத்து ரகசிய ஒப்பந்தங்களையும் ரத்து செய்துவிட்டு சிங்களப் படையினரை இந்தியாவில் இருந்து உடனே வெளியேற்ற வேண்டும் என்று மறுமலர்ச்சி தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ வலியுறுத்தியுள்ளார்.
இது தொடர்பாக அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:
ஈழத்தமிழர்களின் ரத்தம் தோய்ந்த கரங்களுடன் இயங்கி வரும் சிங்கள விமானப் படையினரை, தாம்பூலம் வைத்து வரவழைத்து உபசரித்து, பயிற்சி கொடுக்கின்ற அக்கிரமத்தை, இந்திய அரசு தொடர்ந்து செய்து வருகிறது.
தமிழ்நாட்டில் தாம்பரத்தில் உள்ள இந்திய விமானப்படை தளத்தில் சிங்களவர்களுக்கு பயிற்சி கொடுப்பதை அறிந்து தமிழகத்தில் கண்டனமும், எதிர்ப்பும் கொந்தளிப்பும் ஏற்பட்டது. அதை தொடர்ந்து சிங்கள விமானப்படையினருக்கு பெங்களூரில் எலகங்கா விமானப்படை தளத்தில் தற்போது பயிற்சி கொடுக்கப்படுகிறது.
அண்மையில் இந்திய-இலங்கைக் கடற்படைப் பயிற்சி, திருகோணமலை கடற்கரைக்கு அருகில் நடத்தப்பட்டது. இலங்கை கடற்படைக்கு இரண்டு கப்பல்களையும் கட்டித் தருகின்ற வேலையிலும் இந்தியா ஈடுபட்டு உள்ளது. இதன் மூலம் ஒரு உண்மை வெட்டவெளிச்சமாகி விட்டது.
சிங்கள அரசு நடத்திய இனக்கொலைக்கு, இந்திய அரசுதான் உடந்தை என்ற உண்மை அம்பலமாகி விட்டது. இந்தியாவின் மத்திய அரசுக்குத் தலைமை தாங்கும் காங்கிரஸ் கட்சி, அதில் அங்கம் வகிக்கும் தி.மு.க. உள்ளிட்ட அரசியல் கட்சிகளுமே, இந்தப் பழிக்கு பொறுப்பாளிகள் என்பதை தமிழக மக்களும், இந்திய மக்களும் அறிந்து கொள்வார்கள்.
ஈழத்தமிழர் பிரச்சினையில் செய்து வருகின்ற தொடர் துரோகத்தை இந்திய அரசு இத்துடனாவது நிறுத்திக் கொண்டு, சிங்கள விமானப் படையினரை, இந்தியாவை விட்டு வெளியேற்ற வேண்டும். இலங்கை விமானப்படை, கடற்படை மற்றும் ராணுவத்தோடு, ரகசியமாகச் செய்து உள்ள ஒப்பந்தங்களை ரத்து செய்ய வேண்டும் என்று வைகோ அதில் குறிப்பிட்டுள்ளார்.நன்றி தேட்ஸ் தமிழ்.

Thursday, July 5, 2012

குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி

குற்றாலத்தில் சாரல் மழையுடன் களை கட்டும் சீசன் - கீழக்கரைவாசிகள் மகிழ்ச்சி !

ஒவ்வொரு ஆண்டும் ஜூன், ஜூலை மாதங்களில் குற்றாலத்தில் சீசன் களை கட்ட துவங்கும். தற்போது கொஞ்சம் தாமதமாக சீசன் துவங்கி இருக்கிறது. குற்றாலம் நகரமெங்கும் சாரல் மழை பெய்து, இதமான சீதோஷ்ணம் நிலவுவதாக தகவல்கள் வந்த வண்ணம் உள்ளது. இம்முறை கேரளாவில் தாமதமாகவே தென்மேற்கு பருவமழை தொடங்கினாலும், அங்கும் கூட சாரல் மழையே பெய்கிறது. ஐந்தருவி, மெயின் அருவி, பழைய குற்றால அருவி, புலியருவி உள்ளிட்ட அனைத்து அருவிகளிலும் தண்ணீர் வரத் தொடங்கியுள்ளதால், சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரித்துள்ளது.




ஒவ்வொரு ஆண்டும் குற்றாலம் சீசன் துவங்கியதுமே, கீழக்கரையிலிருந்து, குற்றாலம் நோக்கி அதிகளவில் நண்பர்களுடனும், குடும்ப அங்கத்தினர்களும் சென்று தென் பொதிகையின் மூலிகை நீரில் மகிழ்ச்சி குளியல் போடுவது வழக்கம். தற்போது துவங்கியுள்ள சீசனால், கிழக்கரைவாசிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். இதற்கிடையே கீழக்கரையிலிருந்து, பலர் வாகனங்களில், இப்பொழுதே குற்றாலம் நோக்கி  படையெடுக்க ஆராம்பித்துள்ளனர். 

இங்கிலாந்து பிரதமரை திட்டி, வரிசையில் நிற்க வைத்த வெயிட்ரஸ்

லண்டன்: இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூனை காபி கடையில் வேலைப் பார்க்கும் பெண் ஒருவர் அவர் யார் என்று தெரியாமல் 10 நிமிடம் வரிசையில் நிற்க வைத்துள்ளார்.
இங்கிலாந்து பிரதமர் டேவிட் கேமரூன் பிளைமவுத்தில் நடந்த ஆயுதப்படை தின விழாவில் கலந்து கொள்ள சென்று கொண்டிருந்தார். அப்போது வழியில் ஒரு காபி கடை அருகே காரை நிறுத்தி காபி வாங்கச் சென்றார். கடைக்குள் சென்று காபி கேட்ட கேமரூனை அங்கு வேலைப் பார்க்கும் பெண் ஷீலா தாமஸ் அவர் பிரதமர் என்பது தெரியாமல் அவரிடம் நான் பிசியாக இருப்பது தெரியவில்லையா, வரிசையில் நில்லுங்கள் என்று திட்டினார். இதையடுத்து கேமரூன் வரிசையில் நின்றார். பிறகு கடைக்கு வெளியே வந்து நின்று கொண்டிருந்தார்.
அதற்குள் அவருடன் வந்த பாதுகாவலர்கள் வேறொரு கடையில் இருந்து டீ வாங்கிக் கொண்டு வந்து கேமரூனுக்கு கொடுத்தனர். அப்போது அந்த வழியாகச் சென்றவர்கள் ஆஹா, பிரதமர் இங்கு வந்து டீ குடிக்கிறாரே என்று அவரை மரியாதையுடன் பார்த்துச் சென்றனர். அதன் பிறகு கேமரூன் மீண்டும் கடைக்குள் சென்றார். ஆனால் அவர் வேறு கடையில் டீ வாங்கிக் குடிப்பதைப் பார்த்த ஷீலா தன் கடையில் ஏன் வாங்கவில்லை என்று அவரை மீண்டும் திட்டினார்.
இது குறித்து ஷீலா கூறுகையில்,
முதலில் என் கடைக்கு வந்திருப்பவர் கேமரூன் தான் என்று எனக்கு தெரியவில்லை. நான் வேறு ஒருவருக்கு உணவுப் பொருட்கள் எடுத்துக் கொடுத்துக் கொண்டிருந்தேன். அதனால் நான் அவரை கவனிக்கவில்லை. பார்சல் காபி கிடைக்குமா என்று கேமரூன் கேட்டார். அதற்கு நான், வேறு ஒருவருக்கு சர்வ் செய்து கொண்டிருக்கிறேன் என்றேன். உடனே அவர் சாரி சொன்னார். அதன் பிறகே அவர் பிரதமர் என்பதை எனக்கு சிலர் தெரிவித்தனர்.
கேமரூனை வெயிட்ரஸ் ஒருவர் அடையாளம் தெரியாமல் பேசியது இது ஒன்றும் முதல் தடவை இல்லை. ஏற்கனவே அவர் குடும்பத்துடன் டஸ்கனியில் விடுமுறையைக் கொண்டாடச் சென்றபோது அங்கு ஒரு உணவகத்தில் வேலை பார்க்கும் பெண் நான் பிசியாக இருக்கிறேன், நீங்களே உங்கள் பானங்களை எடுத்துச் செல்லுங்கள் என்று கூறியுள்ளார்

தமிழகத்திலேயே மோசமான ரோடு சென்னைதானாம்...!

சென்னை: தமிழகத்திலேயே மோசமான சாலைகளாக சென்னை மாநகர சாலைகள் திகழ்வதாக தேசிய குற்ற ஆவணப் பதிவகம் கூறியுள்ளது.
சென்னை மாநகரில் 2011ம் ஆண்டு மொத்தம் 9845 சாலை விபத்துக்கள் நடந்துள்ளதாம். இரண்டாவது இடத்தை நாட்டின் தலைநகர் டெல்லி பிடித்துள்ளது. அங்கு 6065 சாலை விபத்துக்கள் நடந்துள்ளன. பெங்களூர் நகரம் 6031 விபத்துக்களுடன் 3வது இடத்தைப் பிடித்துள்ளது.
தேசிய குற்ற ஆவணப் பதிவகம், 2011ல் நடந்த சாலை விபத்து மரணங்கள் மற்றும் தற்கொலைகள் குறித்த அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் நாட்டிலேயே சென்னையில்தான் அதிக அளவில்சாலை விப்ததுக்கள் நடப்பதாகவும், சென்னை மாநகர சாலைகள்தான் மோசமானதாக இருப்பதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
நாட்டில் உள்ள 53 நகரங்களில் சென்னையில்தான் அதிக அளவில் சாலை விபத்துக்கள் நடக்கின்றனவாம். கடந்த 2010ம் ஆண்டு மொத்தம் 5123 விபத்துக்களைத்தான் சென்னை சந்தித்தது. ஆனால் இது 2011ம் ஆண்டு கிட்டத்தட்ட இரட்டிப்பாகியுள்ளது.
இருப்பினும் சாலை விபத்துக்களில் மரணமடைவோரின் எண்ணிக்கை சென்னையில் சற்று குறைவாக உள்ளது. சென்னையில் 2011ல் நடந்த சாலை விபத்துக்களில் 1399 பேர் இறந்துள்ளனர். டெல்லியில் இது 1679 பேராக இருந்தது.
சென்னை சாலை விபத்துக்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை அதேசமயம் அதிகமாக உள்ளது. விபத்துக்களில் காயமடைந்தோர் எண்ணிக்கை 7898 பேராக இருந்தது. இதில் 6280 பேர் ஆண்கள், 1618 பேர் பெண்கள் ஆவர்.
டூவீலர்களில் சென்று விபத்துக்குள்ளானோரின் எண்ணிக்கை 341 ஆக இருந்தது. தனியார் லாரிகளால் ஏற்படும் விபத்து 266, கார்களால் விபத்து 159, தனியார் டெம்போக்கள் மற்றும் வேன்களால் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை 133 ஆக இருந்தது.
அரசு வாகனங்களால் அதாவது பஸ்கள் உள்ளிட்டவற்றால் ஏற்பட்ட விபத்துக்களின் எண்ணிக்கை 112 ஆகும்.
சைக்கிளால் கூட சென்னையில் விபத்து நடந்துள்ளது. அதாவது ஒரே ஒரு விபத்து நடந்துள்ளது. அதேசமயம், பாதசாரிகளால் எந்த விபத்தும் நடந்ததில்லை. அதாவது, நடந்து போனால் நல்லது என்பது இதன் சாராம்சம்.
ராத்திரி 9 மணியிலிருந்து நள்ளிரவுக்குள்தான் பெரும்பாலான விபத்துக்கள் நடக்கின்றன. அதாவது 1626 விபத்துக்கள் இந்த நேரத்தில்தான் நடந்துள்ளன. மாலை 3 மணி முதல் 6 மணி வரை 1614 விபத்துக்கள் நடந்துள்ளன.
தமிழகத்திலேயே மோசமான சாலைகள் இருப்பதும் சென்னையில்தானாம். இதற்கு அடுத்து கோவையில் 1131 விபத்துக்கள் நடந்துள்ளன. மதுரையில் 685 விபத்துக்களும், திருச்சியில் 781 விபத்துக்களும் நடந்துள்ளன.

பத்மநாபசாமி கோவில் 5வது ரகசிய அறை திறக்கப்பட்டது-10 லட்சம் கோடி சொத்துக்கள் இருப்பதாக தகவல்!

திருவனந்தபுரம்: திருவனந்தபுரத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலின் 5வது ரகசிய அறை கடும் முயற்சிக்குப் பின்னர்திறக்கப்பட்டது. அந்த அறையில் சுமார் 10 லட்சம் கோடி மதிப்பிலான, தங்க, வைர நகைகள் குவிந்து கிடப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
திருவனந்தபுரத்தின் மையத்தில் உள்ள பத்மநாபசாமி கோவிலில் உள்ள 6 ரகசிய அறைகளில் பல லட்சம் கோடி அளவுக்கு பொக்கிஷம் குவிந்திருப்பதாகவும், இதை சிலர் அபகரித்து வருவதாகவும், எனவே இதைத் திறந்து உள்ளே என்ன இருக்கிறது என்பது குறித்து ஆராய வேண்டும் என்றும் கோரி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டது.
வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம் அனைத்து அறைகளையும் திறந்து பார்க்க உத்தரவிட்டது. அதன்படி அந்த அறைகள் திறந்து பார்க்கப்பட்டன. அதில் 5வது அறை மட்டும திறக்கப்படாமல் இருந்தது. அதன் பூட்டுக்களைத் திறப்பதில் பெரும் சிக்கல் இருந்ததால் அந்த அறை மட்டும் திறக்காமல் விடப்பட்டிருந்தது. இருப்பினும் மற்ற அறைகளில் இருந்த நகைகள், பொக்கிஷத்தின் மதிப்பு பல லட்சம் கோடி என்று தகவல்கள் வெளியானதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் தற்போது 5வது அறையும் திறக்கப்பட்டு விட்டது. அதன் பூட்டை மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் திறந்து உச்சநீதிமன்றம் அமைத்துள்ள குழுவினர் உள்ளே சென்று ஆய்வு நடத்துகின்றனர். அந்த அறை முழுக்க தங்க, வைர நகைகள் குவிந்து கிடக்கிறதாம். 300 தங்கக் குடங்கள் உள்ளே வைக்கப்பட்டிருந்தன. அதேபோல பெரிதும் சிறிதுமாக 2000 வைர நகைகள் இருக்கிறதாம். இவற்றை மதிப்பிடும் பணியை முடிக்க 6 மாதம் வரை ஆகலாம் என்று கூறப்படுகிறது. இருப்பினும் அங்குள்ள மொத்த நகைகளின் மதிப்பு ரூ. 10 லட்சம் கோடியாக இருக்கலாம் என்று செய்திகள் தெரிவிக்கின்றன.
ஒரே அறையில் இவ்வளவு பெரிய அளவில் நகைகள் குவிந்து கிடப்பதாக வந்துள்ள செய்தியால் மீண்டும் பத்மநாபசாமி கோவில் பரபரப்பாகியுள்ளது.
ரகசிய அறைகள் திறக்கப்பட்டு அங்கு பெருமளவில் பொக்கிஷம் இருப்பது கண்டுபிடிக்கப்பட்டதுமே கோவிலுக்கு பலத்த பாதுகாப்பு அளிக்கப்பட்டு வருவது நினைவிருக்கலாம்.நன்றி தேட்ஸ் தமிழ்

பாகிஸ்தானில் குரானை எரித்தவர் பெட்ரோல் ஊற்றி எரித்துக் கொலை

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை எரித்தவர் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொல்லப்பட்டார்.
பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் உள்ள பகவல்பூரில் ஒருவர் இஸ்லாமியர்களின் புனித நூலான குர்ஆனை தீ வைத்து எரித்தார் என்று கூறப்படுகிறது. இது குறித்து தகவல் அறிந்த போலீசார் அவரைக் கைது செய்து காவல் நிலையத்திற்கு கொண்டு சென்றனர். இதற்கிடையே இந்த தகவல் ஊர் முழுவதும் காட்டுத் தீ போன்று பரவியது.
இதையடுத்து ஆத்திரத்துடன் காவல் நிலையத்திற்கு சென்ற அப் பகுதியினர் அந்த நபரை ஒன்று போலீசார் தங்கள் கண் முன் கொல்ல வேணடும், அல்லது தாங்கள் கொல்வோம் என்று கூறினர்.
அந்த நபரை வெளியே விட போலீசார் மறுத்தவுடன் அந்த கும்பல் காவல் நிலையத்தை தாக்கியது. இதையடுத்து போலீசார் கண்ணீர்ப் புகை குண்டுகள் வீசி கும்பலை கலைக்க முயன்றனர்.
ஆனால் அவர்கள் போலீசாரைத் தாக்கிவிட்டு அந்த நபரை அங்கிருந்து இழுத்துச் சென்றது. அவர் எந்த இடத்தில் வைத்து குர்ஆனை எரித்தாரோ அதே இடத்தில் அவரை நிற்க வைத்து அவரது உடலில் பெட்ரோல் ஊற்றி தீ வைத்து எரித்துக் கொன்றனர். பாகிஸ்தானில் இஸ்லாமை அவமதித்தால் மரண தண்டனை விதிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.
இதற்கிடையே இது குறித்து போலீசார் கூறுகையில், குர்ஆனை எரித்ததற்காக கைது செய்யப்பட்ட நபர் எங்கள் காவலில் இருக்கையில் தானாக பேசிக் கொண்டும், சிரித்துக் கொண்டும் இருந்தார். அவரைப் பார்த்தால் மனநிலை பாதிக்கப்பட்டவர் போல் இருந்தார் என்றனர்.

விஜய் ரசிகர்களை போட்டுத் தாக்கிய விஜயகாந்த் ரசிகர்கள்!

சென்னை: சென்னை அருகே விஜய் ரசிகர்களை தேமுதிகவைச் சேர்ந்தவர்கள் சரமாரியாகத் தாக்கினர். இதனால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
பரங்கிமலை ஒன்றிய விஜய் ரசிகர் மன்றம் சார்பில் மக்கள் மன்றம் என்ற பெயர் பலகை திறப்பு விழா சென்னை அருகே பெருங்களத்தூர் குண்டுமேட்டில் நேற்று நடைபெற்றது. பரங்கிமலை விஜய் ரசிகர் மன்ற ஒன்றிய செயலாளர் செந்தில் தலைமை வகித்தார். விழா நடந்து கொண்டிருந்தபோது அங்கு வந்த அப்பகுதியை சேர்ந்த தேமுதிகவினர் விழாவுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.
இதில் இரு தரப்பினருக்கும் கடுமையான வாக்குவாதம் மற்றும் கைகலப்பு ஏற்பட்டது. இரு தரப்பினரும் மாறி மாறித் தாக்கிக் கொண்டனர். இதையடுத்து போலீஸாருக்குத் தகவல் போனது. போலீஸார் விரைந்து வந்தனர். அதைப் பார்த்த தேமுதிகவினர் ஓட்டம் பிடித்தனர்.
தேமுதிகவினர் நடத்திய தாக்குதலில் விஜய் ரசிகர் மன்றத்தைச் சேர்ந்த 3 பேர் படுகாயமடைந்தனர். இதையடுத்து அவர்களை மருத்துவமனைக்கு அழைத்துச் சென்றனர்.
விஜய் ரசிகர்கள் கொடுத்த புகாரின் பேரில் தேமுதிகவைச் சேர்ந்த 3 பேர் மீது போலீஸார் வழக்குப் பதிவு செய்து வலை வீசி தேடி வருகின்றனர்.நன்றி தேட்ஸ் தமிழ்.

கேஸ் சிலிண்டர் வெடிப்பு மரணங்கள் தமிழ்நாட்டில் அதிகம்: முதலிடத்தில் குஜராத்!

தமிழ்நாட்டில் சமையல் கேஸ் சிலிண்டர் வெடித்து கடந்த ஆண்டு மட்டும் 586 பெண்கள் உயிரிழந்துள்ளதாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையத்தின் புள்ளிவிபரத்தில் தெரியவந்துள்ளது. இந்தியாவிலேயே அதிக அளவில் கேஸ் சிலிண்டர் விபத்து நடந்த மாநிலமாக குஜராத் உள்ளது. அம்மாநிலத்தில் மட்டும் 735 பேர் உயிரிழந்துள்ளனர். இது தொடர்பாக தேசிய குற்றப்பதிவேடுகள் ஆணையம் வெளியிட்டுள்ள புள்ளி விவரம் வருமாறு:-
கேஸ் ஸ்டவ் மற்றும் சமையல் எரிவாயு சிலிண்டர் வெடித்தும், கேஸ் கசிவினால் ஏற்படும் தீ விபத்திலும் பலியாவோர் எண்ணிக்கை அதிகரித்தபடி செல்கிறது. பல வழிகளில் பாதுகாப்பு மற்றும் முன் எச்சரிக்கை தொடர்பான விழிப்புணர்வுகள் ஏற்படுத்தப்படுகின்றன. ஆனாலும், விபத்துகள் குறைந்த பாடில்லை.
கடந்த ஆண்டில் குஜராத்தில் ஸ்டவ் வெடித்தும், எரிவாயு சிலிண்டர் வெடித்தும் பாதிக்கப்பட்டவர்கள் 762 பேர். இவர்களில் 735 பேர் பலியாகி விட்டனர். தமிழ்நாட்டில் 632 பேர் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டதில் 586 பேர் இறந்து போயினர். மராட்டியத்தில் 541 பேரும், ஆந்திராவில் 426 பேரும், கர்நாடகத்தில் 386 பேரும் பலியாகி உள்ளனர். கேரளாவில் மட்டுமே இதன் எண்ணிக்கை குறைவாக (52 பேர்) உள்ளது.
வீட்டு சமையல் அறையில் பயன்படுத்தப்படும், எரிவாயு சிலிண்டர், கேஸ் ஸ்டவ் ஆகியவை பல நேரங்களில் எமனாக மாறி விடுகின்றன. அவ்வப்போது உயிர்களை பலிவாங்கி விடுகின்றன. அந்த வகையில் குஜராத் முதலிடத்திலும், தமிழகம் இரண்டாவது இடத்திலும் உள்ளன. இது தொடர்பாக,
ஸ்டவ் வெடித்தும், எரிவாயு சிலிண்டர் வெடித்தும் உடல் கருகி பலியானவர்களில் 82 சதவிகிதம் பேர் பெண்கள் ஆவர். இதில் பெரும்பாலும் விபத்தாக இருந்தாலும், அவை வரதட்சணை பிரச்சனையினால் ஏற்பட்ட கொலையாகவோ, தற்கொலையாகவோ இருக்கலாம் என சமூக ஆர்வர்கள் கூறியுள்ளனர். சென்னையில் மட்டும் கடந்த ஆண்டு சமையல் எரிவாயு சிலிண்டர் மூலம் 96 விபத்துக்கள் ஏற்பட்டுள்ளன. இதில் 91 பேர் இறந்து விட்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இனி 24 மணி நேரமும் ஊத்திக்கோ, குடிச்சிக்கோ, கொண்டாடிக்கோ...!

சென்னை: பார் புகழும் தமிழகத்தின் மகுடத்தில் மேலும் ஒரு நவரத்தினக் கல்லை தூக்கி வைத்துள்ளது தமிழக அரசு. அதுதான் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து குடிமக்களுக்கு சர்வீஸ் செய்யலாம் என்பது.
தமிழகத்தின் பெருநகரங்களான சென்னை, மதுரை, கோவை, திருச்சி நகரங்களுக்கு மட்டும் இப்போதைக்கு இந்த உத்தரவு பொருந்தும். இந்த நகரங்களில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்கள் மற்றும் ஹோட்டல்களில் கூடுதல் சுங்க வரியைச் செலுத்தி விட்டு, 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்து 'குடிமக்களுக்கு' மது விற்பனை செய்யலாமாம்.!
ஏற்கனவே டாஸ்மாக் மதுக்கடைகள் மற்றும் பார்கள் மூலம் அரசுக்கு எக்குத்தப்பாக வருவாய் கொட்டிக் கொண்டிருக்கிறது. இந்த நிலையில் இதை மேலும் அதிகரிக்கும் வகையில் 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைக்கும் அனுமதியை அளித்துள்ளது அரசு.
இதுதொடர்பான உத்தரவை சில நாட்களுக்கு முன்பு தமிழக அரசின் உள்துறை, மதுவிலக்கு மற்றும் சுங்கத்துறை பிறப்பித்துள்ளது. அதன்படி சென்னை, திருச்சியில் உள்ள 5 நட்சத்திர ஹோட்டல்களில் வழக்கமான வரிக் கட்டணத்தை செலுத்தி விட்டு 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைத்துக் கொள்ளலாம்.
அதேபோல மதுரை, கோவையில் உள்ள ஹோட்டல்களில் இரட்டிப்பு வரிக் கட்டணத்தை செலுத்தி விட்டு 24 மணி நேரமும் பார்களைத் திறந்து வைக்கலாம்.
சென்னை, திருச்சிக்கு மட்டும் வழக்கமான கட்டணத்தை செலுத்த அரசு கூறியிருப்பதற்குக் காரணம், இங்கு அதிக அளவில் சர்வதேச பயணிகள் கூட்டம் இருப்பதால்தானாம். குறிப்பாக வெளிநாட்டினரை அதிக அளவில் ஈர்க்கும் முயற்சியாக இது கருதப்படுகிறது.
அதேசமயம், மேற்கண்ட நகரங்களைத் தவிர பிற நகரங்களின் ஹோட்டல்களில் உள்ள பப்களை தற்போது திறந்து வைத்திருக்க அனுமதிக்கப்பட்டுள்ள நேரத்தை விட கூடுதலாக ஒரு மணி நேரம் திறந்து வைத்துக் கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. அதாவது தற்போது 11 மணி வரை மட்டுமே இவர்கள் பப்களை திறந்திருக்கலாம். இனிமேல் அதை 12 மணியாக்கி விட்டனர். அதாவது நள்ளிரவு வரை உற்சாக பானங்களை இங்கு விற்கலாம்.
அரசின் இந்தப் புதிய நடவடிக்கைக்கு தமிழகம் முழுவதும் உள்ள ஹோட்டல்கள், பார்கள் நிர்வாகிகளிடையே நல்ல வரவேற்பு கிடைத்துள்ளதாம்.
நீதி: இதனால் குடிமக்கள் அறிந்து கொள்ள வேண்டிய நீதி என்னவென்றால், பாரை மூடி விடுவார்களே என்று அவசரம் அவசரமாக குடிக்கத் தேவையில்லை. நிதானமாக குடிக்கலாம். அதிகாலை 4 மணிக்கு வந்து கேட்டால் கூட தயங்காமல் சப்ளை செய்வார்கள்! நன்றி தேட்ஸ் தமிழ்